ஏப்ரல் 2014

என் அருகே நீ இருந்தால் | En aruke nee irunthaal


வந்து போகும் உன் கனவுகள்
விடியலோடு விடை பெறாது
விடை பெறாத உன் நினைவுகள் 
விழியின் ஓரமாய் தேங்காது!

உனக்கும் எனக்கும் தூதுவானாய்
தூதுவாக வந்த மூச்சுக் காற்று
வான் வெளியோடு கலவாது
நம் மனதோடு கலந்திருக்கும்!

வரமாய் வந்த உறவு நீயென 
உலகறிய செய்திருப்பேன்!
உன்னில் மட்டும் நான் என்று 
உன் உயிரோடு கலந்திருப்பேன்!

உன் குறிப்பறிந்து பணிவிடை 
உனக்கு மட்டும் செய்திருப்பேன்
உன் உதடுகள் உத்தரவிடும் முன் 
உன் முன்னே நின்றிருப்பேன்!

உன் கரம் தொட்டு வீதி உலா
தினமும் வந்திருப்பேன்!
உன் உள்ளங்கையில் காதல் ரேகையாய்
உன்னோடு இருந்திருப்பேன்!

விழிகள் ஏதும் இல்லாமல் 
பூவிதழ் வருடும் காற்றாய் 
உன் முகவரியது  தெரியாமல்
உன் நினைவோடு வாழ்ந்திருக்க மாட்டேன்!

காதல் அது உயிரெழுத்துக்கள் அல்ல
கவலை கொண்டிருக்க மாட்டேன்!
கவலை கொண்டிருப்பேன் 
உன் பெயர் உயிரெழுத்துக்கள் அல்ல என்று!

உன் நிழற்படம் நான் காண 
விழியது சுவை நரம்பு பெற்றிருக்கும்
அருகில் நீ இருந்தால் 
அமிர்த சுவை தெரிந்திருப்பேன்!

மணமேடை நம் மனம் தாங்கி 
மண வாழ்க்கை மணம் பெற்றிருக்கும்
மகிழ்வோடு இருந்திருப்பேன் 
மணவாளனே உன்னோடு இருந்திருப்பேன்!

எனக்கு மட்டும் ஏன் இப்படி 
கேள்விகணை தொடுத்திருக்க மாட்டேன்!
கரம் கூப்பி தெய்வம் முன்னே 
கண் கலங்கி நின்றிருக்க மாட்டேன்!

எல்லாம் கை கூடியிருக்கும்
என் அருகே நீ இருந்தால்!




தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் | Tamil new Year

tamil new year
Tamil new year kavithai


சூரியக் கதிர் அது
பூமிதனை முத்தமிட 
உலவுகின்ற பனி 
ஓய்வெடுக்க செல்லும்!

இடை அது வளைந்து 
நங்கை இடுவாள் கோலம்
தூரிகை இல்லா
வரைந்த ஓவியமாய்!

விழியின் பளு அது 
இரவில் நித்திரையோடு
இரவல் கனவுகள் 
விடியலோடு செல்லும்!

விடியல் கண்ட விழி 
கலைந்து விட்ட பனி 
நங்கை அவள் ஓவியம்
விடை பெற்ற கனவுகள்
வழக்கம் போல 
இது ஒரு நாளின் விடியல்.

இருந்தாலும் அகம் அது 
அளவில்லா ஆர்ப்பரிக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு 
விழியது கண்டுவிட!

விடியல் காண போகும் 
தமிழ் விழிகளுக்கு 
தமிழ் தோழமைகளுக்கு

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!









மன சிறகுகள் | Mana Sirakukal

மன சிறகுகள்
Mana Chirakukal


இருவரி திருக்குறள் போல
பொய்தனை சொல்லாது
இருவரி இதழ்கள்
நாளும் மெய் பேச
மனமது ஆணையிடனும்!

உன் புகழ் பிறர் சொல்ல
தற்பெருமை நீ கொள்ளாது
தரணியில் நல்வாழ்வு வாழ
மனமது ஆணையிடனும்!

அகம் அது அழுதாலும்
பிறர்முன் சிரித்திட
இன்முகம் நீ காட்ட
மனமது ஆணையிடனும்!

நன்றி மறவா நினைவோடு
தீமை மறக்கும் மனமோடு
நல் மனிதனாய் வாழ
மனமது ஆணையிடனும்!

பெற்றவள் தெய்வ மென 
தந்தை வாக்கு மந்திரமென
பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க
மனமது ஆணையிடனும்!

அகவை முதிர்ந்த முதுமையிடம்
அகத்தால் அன்பு கொண்டு
குணத்தால் மரியாதை செலுத்திட
மனமது ஆணையிடனும்!

பருவங்கள் சொல்லும் காதல்
பள்ளி கல்லூரியில் வந்து விடா
படிப்பில் மட்டும் சிறப்புற்றிட
மனமது ஆணையிடனும்!

அதர்மம் தனை நோக்கி
பாதங்கள் நடை போடா
தர்மம்  தனை நோக்கி
பாதங்கள் நடை போட
மனமது ஆணையிடனும்!

மனசிறகுகள் சரியாய் பயணிக்க
மானுடத்துள் சான்றோனாய் வாழ
மனமது ஆணையிடனும்!
விரிப்போம் மன சிறகுகளை!